என் உயிர் பிரிந்த இரண்டு மணிகளில்,
வீட்டில் உள்ளவர்க்கு சலிப்பு ஏற்படுமுன்,
விருப்பமுள்ளவர்கள் ஓடோடி வந்ததும்,
விருப்பமில்லாதோர் தவிர்க்க காரணம் தேடுமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...
எரித்துவிடுங்கள் என் சிதையை...
துக்கம் அனுசரிப்போர் பசியாற போகுமுன்,
காத்திருத்தலுக்கு மாண்டவரை கரித்து கொட்டுமுன்,
துக்கம் மறந்து பெண்டீர் சுற்றத்தை சாடுமுன்,
எழவு வீடென்றும் பாராமல் அழகு குறிப்பை பகிருமுன்
எரித்துவிடுங்கள் என் சிதையை...
எரித்துவிடுங்கள் என் சிதையை...
என் பிணத்தின் அருகில் அமர்ந்து
அலைபேசியை கொண்டு முகநூலில் அரசியல் பேச்சையும்,
வடிவேலுவின் மீம்ஸையும் ரஜினியின் அரசியலையும்,
ரசித்து பக்கத்தில் பகிர்ந்து கொக்கரிக்குமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...
எரித்துவிடுங்கள் என் சிதையை...
முகூர்த்தம் முடிந்ததுபோல் பழச்சாறை பருகுமுன்,
அலுவலக அரசியல் சூடு பிடிக்குமுன்,
பசியின் காரணத்தால் பிணத்தை சாடுமுன்,
அன்பிலார் வந்து செயற்கையாக சிலாகிக்குமுன்,
எரித்துவிடுங்கள் என் சிதையை...
எரித்துவிடுங்கள் என் சிதையை...
கொள்ளி போடுபவன் மறத்தும் மறந்தும்
எள்ளி நகையாடி அன்பை துறக்குமுன்
எரித்துவிடுங்கள் என் சிதையை...!!!
No comments:
Post a Comment