"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போல ஆடுது,
பொழுதாகி போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்ன தேடுது...."
ஒவ்வொரு முறையும் இந்த பாடலை கேட்கும் பொழுதும் பாடும் பொழுதும் 40 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திருச்சியை ஞாபகப்படுத்துகிறது... இளமை பருவத்தில் எனக்கேற்பட்ட ஏதேனும் காதல் விவகாரமாக இருக்குமோ என நீங்கள் உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுவது எனக்கு நன்றாக புரிகிறது...
திருச்சி தில்லை நகர் நான்காவது கிராசுக்கும் ஐந்தாவது கிராசுக்கும் இடையே இருந்த ஒரு தேநீர் கடையே நியாபகம் வருகிறது. திரை இசை மீது ஏற்பட்ட அபரிமிதமான ஆர்வம் என்னைப் போன்றவர்களுக்கு இளையராஜா வந்தபின்தான்.. அதற்கு பாலமாக இருந்தது அந்த தேநீர் கடை தான்...
எண்பதுகளில் நினைவு தெரிந்த பிறகு ஒருவர் பள்ளியிலோ கல்லூரியிலோ படித்துக் கொண்டிருந்தவராயின், பழைய நினைவுகளில் காதலை விட கண் முன்னே வந்து நிற்பது இளையராஜாவா தான் இருக்கும்...
"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" என்பதற்கேற்ப அந்த தேநீர் கடையின் வாயிலில் காத்திருந்து காத்திருந்து இசைஞானி பாடல்களை கேட்ட ஒரு காலம் உண்டு...
முரளியையும் தெரியாது குயிலியையும் தெரியாது... ஆனால் "ஆத்தாடி பாவாட காத்தாட" மட்டும் தெரியும்...
கேப்டனை தெரியாது ஆனால் "சின்ன மணிக்குயிலே" மட்டும் தெரியும்...
"பொன்மானே சங்கீதம் பாடி வா "
"தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா"
"என்னை தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே"
"சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது"
ஒவ்வொரு முறையும் ஒரு புது பாடல் ஒலிக்கும் போது ஒரு 10 அடி தள்ளி நின்று அந்தப் பாடலை க்ரஹித்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் தாமதமாக வீட்டுக்கு திரும்பி வரும் பழக்கம் உண்டு... தனிமைக்கு சிறந்த மருந்து இளையராஜாவின் பாடல்கள் என அன்றே எனக்குப் புரிய வைத்த காலமது...
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த திரையிசை பாடல்கள் கேட்பதும் என்னுடைய தொட்டில் பழக்கமாக தொடங்கியதுதான்...
"கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ",
"பூவரசம்பு பூத்தாச்சு பொண்ணுக்கு செய்தியும் வந்தாச்சு "
"சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையே"
போன்ற பாடல்களே எனக்கு ஒரு தாலாட்டு பாடலாக அமைந்த ஒரு காலமும் உண்டு...
ஆயினும் திருச்சி எனக்கு என்னுடைய விடலைப் பருவத்தில் திரையிசை மீதான காதலையும் அதற்கு காரணமாக இருந்த இளையராஜாவையும் பசுமரத்தாணி போல் பதிய வைத்தது.
இசைஞானி இசையைத் தவிர வேறு எந்த போதைக்கும் என்னை அடிமையாக்காமல் ஒரு நல்வழியில் பயணிக்க வைத்ததில் திருச்சி மாநகரத்துக்கு பெரும் பங்குண்டு.
சென்னைக்கும் திருச்சிக்கும் அந்த காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த கண்ணன் & கண்ணன் வீடியோ பஸ் "செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தணமே" வையும் "இதயம் ஒரு கோவில் அது உதயம் ஒரு பாடல் "யையும் "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா " வையும் "ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே" வையும் என் காதில் ஒலிக்கச் செய்து என்னை பித்தனாக்கியது...
தனிமையை கையாள திருச்சி எனக்கு சொல்லிக் கொடுத்தது என்றால், தனிமையும் ஒரு சுகமே என எனக்கு புரிய வைத்தது இசைஞானியின் திரை இசை பாடல்கள்...
திருச்சியில் இருந்த போது நான் கற்ற பல பாடங்கள், வேதனைகள், ஏற்பட்ட கோபங்கள், இயலாமையால் ஏற்பட்ட கசப்புகள்....இவை அனைத்திற்கும் இடையே ஒரு மகிழ்ச்சியும் உண்டு என்றால், அது மனதை வருடி மனிதனாக வைத்திருந்த இசைஞானி என்னும் மந்திரமும், அதனால் ஏற்பட்ட சுகமும், அந்தத் திரையிசையின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும் தான்.
திருச்சியில் எனக்கு எந்த காதலியும் இருந்ததில்லை என்றாலும், அந்த திருச்சி மாநகரின் மீதே ஒரு தீரா காதல் இருப்பது, அந்த 15 வயதில் என்னை தன்மை மாற்றம் செய்து வாழ்வை புரிய வைத்ததும், எனக்கு திருச்சி 13 வயதில் அறிமுகப்படுத்திய இசைஞானியும் அவரின் இசை வருடல்களாலும்தான்...
"நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா"